Home இலங்கை “அரசாங்க ஊழியர்களை அவமதிக்கும் தற்போதைய ஆட்சி” – விமல் வீரவன்ச கடும் சாடல்!

“அரசாங்க ஊழியர்களை அவமதிக்கும் தற்போதைய ஆட்சி” – விமல் வீரவன்ச கடும் சாடல்!

0
image

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களை மிக மோசமாக அவமதித்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். 

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விசனத்தை வெளியிட்டார்.

கடந்த காலத்தில் அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொந்தமாக வாகனங்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளுடன் கூடிய எதிர்காலம் ஒன்று உருவாக்கிக் கொடுக்கப்பட்ட போதிலும், தற்போதைய ஆட்சியில் அவர்களுக்கு 20 கிலோ அரிசியைக் கடனாக வழங்கும் அவல நிலையே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இந்த நாட்டின் அரச ஊழியர்களே திரண்டு சென்று தபால் மூலம் வாக்களித்து இந்த ஆட்சியை உருவாக்க உதவினார்கள் எனக் குறிப்பிட்ட அவர், இன்று அதே அரச ஊழியர்களை “திருடர்கள்” என்று அமைச்சர் லால் காந்த பகிரங்கமாக விமர்சித்து வருவதாகவும் தெரிவித்தார். 

அரச ஊழியர்களை இவ்வளவு அவமதிக்கும் மற்றும் பழிவாங்கும் ஒரு நிர்வாகம் இதற்கு முன்னர் இலங்கையில் இருந்ததில்லை என்றும், இது வரலாற்றிலேயே மிக மோசமானதொரு ஆட்சி என்றும் அவர் மேலும் சாடினார்.

அதேவேளை, தற்போதைய அரசாங்கத்திடம் நாட்டின் வளர்ச்சிக்கான எந்தவொரு முறையான திட்டமும் இல்லை எனத் தெரிவித்த விமல் வீரவன்ச, தினம் இருவரை என்ற கணக்கில் கைது செய்வது மட்டுமே இந்த அரசாங்கத்தின் பிரதான வேலைத்திட்டமாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார். 

ஏதாவது ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தி, தினமும் இருவர் வீதம் கைது செய்து, அதன் மூலமே இந்த அரசாங்கம் தங்களைத் தக்கவைத்துக் கொள்ளப் பார்ப்பதாகவும் அவர் தனது ஊடக அறிக்கையில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Source: https://samugammedia.com/the-current-administration-insults-government-employees–wimal-weerawansa-lashes-out-1782794007

NO COMMENTS

Exit mobile version