Home இலங்கை இலங்கைக்கு முக்கிய அறிவிப்பு! இன்னும் 4 ஆண்டுகளில் கண்ணிவெடிகள் முற்றிலும் அகற்றப்படுமா?

இலங்கைக்கு முக்கிய அறிவிப்பு! இன்னும் 4 ஆண்டுகளில் கண்ணிவெடிகள் முற்றிலும் அகற்றப்படுமா?

0
image

இலங்கையில் கண்ணிவெடிகள் காணப்பட்ட பகுதிகளில் சுமார் 90 சதவீதமான நிலப்பரப்புகள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள 20.8 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு மிகவும் சிக்கலான மற்றும் கடினமான பகுதியாக இருப்பதாகவும், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இலங்கையை முழுமையாக கண்ணிவெடிகள் அற்ற நாடாக அறிவிக்க எதிர்பார்ப்பதாகவும் சர்வதேச கண்ணிவெடி அகற்றும் தூதுவரும் ஹொலிவுட் நடிகையுமான ரோசமண்ட் பைக் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (10) வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்கவை சந்தித்தபோது இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் அவர் கேட்டறிந்ததுடன், சர்வதேச தரங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் பணிகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

எஞ்சியுள்ள பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிறப்புப் பயிற்சி பெற்ற 500 படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரால் மாத்திரம் வருடாந்தம் 1.5 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை கண்ணிவெடிகளிலிருந்து விடுவிப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடிகளை அகற்றுவது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கை மட்டுமல்ல எனவும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் அபிவிருத்தி, சுற்றுலாத்துறை வளர்ச்சி மற்றும் அனைத்து சமூகங்களிடையேயும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான முக்கிய தேசிய பணியாகும் எனவும் ரோசமண்ட் பைக் தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/important-announcement-for-sri-lanka-will-landmines-be-completely-cleared-in-the-next-4-years-1786373688

NO COMMENTS

Exit mobile version