இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் தற்போது சேமிக்கப்பட்டுள்ள நீரின் அளவு சுமார் 45 சதவீதமாக உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு தற்போது சுமார் 33 சதவீதமாக காணப்படுவதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீர் முகாமைத்துவம்) பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது சுமார் 20 சதவீதமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ‘யால’ பயிர்ச்செய்கைப் பருவம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எஞ்சியுள்ள விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தற்போதுள்ள நீர் இருப்பு போதுமானதாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த நீர்த்தேக்கங்களை குடிநீருக்காகச் சார்ந்திருக்கும் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் ‘மஹா’ பயிர்ச்செய்கைப் பருவத்திற்கான விவசாய நடவடிக்கைகள் தொடர்பான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவத்திற்கு முந்தைய மற்றும் பருவக்காலக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, அம்பாறை மாவட்டத்தில் ‘மஹா’ பருவத்திற்கான பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் நாளை (15) ஆரம்பிக்கப்படவுள்ளன.
மேலும், நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர்மட்டம் மற்றும் எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சி தொடர்பான முன்னறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஏனைய நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் ‘மஹா’ பருவ பயிர்ச்செய்கையை ஆரம்பிக்கும் திகதிகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, மேலும் பல நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
