Home இலங்கை தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் – இருவர் கைது

தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் – இருவர் கைது

0
image

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி அதிகாலை சுமார் 3.00 மணியளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முச்சக்கர வண்டியில் வந்து குறித்த வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் வீட்டின் முன் கதவைத் தட்டியதுடன், வீட்டில் இருந்தவர்கள் கதவைத் திறந்த பின்னர் கைக்குண்டை வீட்டுக்குள் வீசியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் வீட்டுக்கு அருகிலுள்ள சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைக்குண்டு வெடித்ததில் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர். பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும், இந்தத் தாக்குதலில் சிறுவர்களின் 55 வயதுடைய தந்தையின் காலிலும் காயம் ஏற்பட்டது.

எனினும், காயமடைந்த தந்தைக்கு இதற்கு முன்னர் எந்தவிதமான குற்றப் பின்னணியும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்திற்கான காரணம் மற்றும் தாக்குதலின் பின்னணி தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/hand-grenade-attack-on-a-house-in-dehiwala–two-people-arrested-1789379120

NO COMMENTS

Exit mobile version