Home இலங்கை இலங்கையில் தொடரும் வறட்சி: கடும் நீர் நெருக்கடியில் 25,563 குடும்பங்கள்!

இலங்கையில் தொடரும் வறட்சி: கடும் நீர் நெருக்கடியில் 25,563 குடும்பங்கள்!

0
image

நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி நிலைமையால் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 25,563 குடும்பங்களின் 81,605 பேர் கடுமையான நீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவை மையம் தெரிவித்துள்ளது.

அம்பாறை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் வறட்சியான வானிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோ நிகழ்வுகளால் உருவாகக்கூடிய வறட்சி நிலைமைகளை எதிர்கொள்வதற்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடையின்றி நீர் வழங்குவதற்கும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பாதுகாப்பு அமைச்சினால் கடந்த ஆகஸ்ட் 6ஆம் திகதி சிறப்புச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்காக நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், போத்தல் குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்காக ஒருவருக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் நீரின் அளவு 6 லீட்டரிலிருந்து 15 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீரை விநியோகிப்பதற்காக தற்போது 324 நீர் பௌசர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 

தேவைக்கேற்ப பிரதேச செயலாளர்கள் அல்லது பாதுகாப்புப் படையினருக்கு சொந்தமான நீர் பௌசர்களையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தற்போதைய வறட்சியினால் ஏற்படும் பேரிடர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மழைக்கால நிலைமைகளை எதிர்கொள்வதற்கும் தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 4.8 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவை மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/ongoing-drought-in-sri-lanka-25563-families-facing-severe-water-shortage-1787372134

NO COMMENTS

Exit mobile version