Home இலங்கை இலங்கையைச் சூழ உருவான தளம்பல் நிலை – கனமழை எச்சரிக்கை

இலங்கையைச் சூழ உருவான தளம்பல் நிலை – கனமழை எச்சரிக்கை

0
image

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் இன்று (15) மேகமூட்டமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பல இடங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று (14) காலை 8.30 மணி முதல் இன்று (15) அதிகாலை 3.00 மணி வரையான காலப்பகுதியில் அதிகபட்ச மழைவீழ்ச்சியாக கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல, வஸ்லதாலாராம பகுதியில் 146.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காற்று தென்மேற்கு திசையிலிருந்தோ அல்லது குறிப்பிட்ட திசையின்றியோ மணித்தியாலத்துக்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

இதனால் குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் மாறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Source: https://samugammedia.com/low-pressure-area-forming-around-sri-lanka—heavy-rain-warning-1789451456

NO COMMENTS

Exit mobile version