யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் ஊர்காவற்றுறை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயதான சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 15 பேரிடம் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென மத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இவ்வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி அனிபாரஜீப் முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், வழக்கின் விசாரணைகளை தாமதமின்றி விரைவாக முன்னெடுக்க வேண்டுமென நீதிமன்றைக் கேட்டுக்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கான கட்டளைகளைப் பிறப்பித்தார். அதற்கமைய, பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 15 நபர்களையும் வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ள 15 பேரில் இரு பொதுமக்கள், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி ஆகியோர் அடங்குகின்றனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை 1.15 மணியளவில், வேலணை – அல்லைப்பிட்டி பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், அவ்வழியாக வந்த ‘ஹைஏஸ்’ ரக வாகனமொன்றை நிறுத்துமாறு சிக்னல் செய்துள்ளனர். எனினும், அந்த வாகனம் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றதாகக் கூறி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், வாகனத்தைச் செலுத்திச் சென்ற 17 வயதுச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
