Home இலங்கை ஊழல், மோசடிகளை நியாயப்படுத்தாதீர்! – எதிரணியின் அரசியல் பழிவாங்கல்குற்றச்சாட்டை முறியடித்த அமைச்சர்

ஊழல், மோசடிகளை நியாயப்படுத்தாதீர்! – எதிரணியின் அரசியல் பழிவாங்கல்குற்றச்சாட்டை முறியடித்த அமைச்சர்

0
image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்துள்ள அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படுவது அரசியல் பழிவாங்கல் அல்ல, மாறாக சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் பணிகளே என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம், சுயாதீன விசாரணை நிறுவனங்களின் ஊடாகவே சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமோ அல்லது பழிவாங்கும் நோக்கோ கிடையாது.

அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் சட்டத்திலிருந்து தப்பிக்கும் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. குற்றங்கள் புரிந்தவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் பதில் கூற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

ஊழல், மோசடி தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள், கடந்த காலங்களைப் போலன்றி மிகவும் வெளிப்படையாகவும் சுயாதீனமாகவும் செயற்படுகின்றன. இதில் எந்தத் தரப்புக்கும் சார்பாகச் செயற்படும் தேவை அரசுக்கு இல்லை.

தங்கள் மீதான சட்ட நடவடிக்கைகளைத் தற்காத்துக் கொள்ள எதிர்க்கட்சிகள் அரசின் மீது ‘அரசியல் பழிவாங்கல்’ என்ற முத்திரையை குத்த முயற்சிக்கின்றன. பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் ஊழல்களை நியாயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை. அரசு மக்களின் பணத்தைப் பாதுகாப்பதிலும், ஜனநாயக விழுமியங்களைக் காப்பதிலும் உறுதியாக உள்ளது.” – என்றார்.

Source: https://samugammedia.com/dont-justify-corruption-and-scams—minister-refutes-opposition-partys-political-revenge-allegations-1783916921

NO COMMENTS

Exit mobile version