தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில், வெல்லும் தெற்கு அமைப்பு (தினன தக்குன) இன்று (02) முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
பாராளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்தாமல், அவற்றை ஜே.வி.பி. கட்சியின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்வதன் மூலம் குறித்த உறுப்பினர்கள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமொன்றை இழைத்துள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் துரித விசாரணையை முன்னெடுக்குமாறும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தமது முறைப்பாட்டில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ள அந்த அமைப்பு, NPPயின் 159 பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.
அத்துடன், ஜே.வி.பி. மற்றும் தொடர்புடைய கட்சியின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
