எல்-நினோ காலநிலை தாக்கத்தால் வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் நான்காவது கூட்டம் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, எல்-நினோ தாக்கம் காரணமாக வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், எல்-நினோ காலநிலையால் மரக்கறி மற்றும் பழச்செய்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பது தொடர்பிலும், நாட்டில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இதுவரை ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எல்-நினோ தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமைபோல் முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான தடையற்ற நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் முன்னேற்றமும் கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டது.
மேலும், பெரும்போகத்தை ஆரம்பிப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை செப்டெம்பர் 4ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எல்-நினோ தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள ஆறு மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசேட அமைச்சரவை உபகுழுவின் அடுத்த கூட்டத்தை செப்டெம்பர் 14ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
