எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள ‘எல்-நினோ’ காலநிலை நிலைமைக்கு முகம்கொடுப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் வகுத்து வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்களுக்கு அமைய, ஜனாதிபதியின் தலைமையில் பல சுற்று விவாதங்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எல்-நினோ காலநிலையால் குறிப்பாக விவசாயம், உணவு உற்பத்தி மற்றும் நீர் வளங்கள் போன்ற துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
எதிர்வரும் ஜூலை – ஓகஸ்ட் காலப்பகுதியிலும், அடுத்த வருடத்திலும் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு அமைச்சுகள் மட்டத்தில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, அடுத்த போக விவசாயச் செய்கையின் போது இந்த நிலைமைக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது குறித்தே ஆராயப்படுகிறது. இதன் பாதிப்புகளைக் குறைத்து, தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை உரிய நேரத்தில் மேற்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.
