தற்போது நிலவி வரும் எல் நினோ காரணமாக ஏற்படும் கடுமையான வெப்பமான காலநிலையால், மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காலி தேசிய மருத்துவமனையின் மனநல ஆலோசகர் மருத்துவர் ரூமி ரூபன் எச்சரித்துள்ளார்.
நீண்ட நேரம் சூரிய வெளிச்சத்தில் இருப்பதால் உடலின் வெப்பநிலை அதிகரிப்பதுடன், அது மனிதர்களின் மனநலத்தையும் நேரடியாகப் பாதிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதிக வெப்பமான சூழல் கோபத்தைத் தூண்டுவதுடன், சகிப்புத்தன்மையைக் குறைத்து, மோதல் போக்கை அதிகரிக்கக்கூடும் என அறிவியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பாதிப்புகள் காலப்போக்கில் தீவிரமான உளவியல் சிக்கல்களாக மாறக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் அதிக வெப்பமான காலநிலையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாகத் தெரிவித்த அவர், வாகன ஓட்டிகளிடையே வீதி கோபம் (Road Rage), குடும்பங்களில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஏற்கனவே மனநலச் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை மற்றும் மனநிலை இந்த வெப்பமான காலநிலையால் மேலும் மோசமடையக்கூடும் எனவும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த அபாயத்தைக் குறைக்கும் வகையில் பொதுமக்கள் நேரடியாக சூரிய வெளிச்சத்தில் நடமாடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
