Home இலங்கை கடற்கொள்ளையர் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி – மீன்பிடி அமைச்சர் உறுதி

கடற்கொள்ளையர் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி – மீன்பிடி அமைச்சர் உறுதி

0
image

அம்பாறை மாவட்ட கடற்றொழில் துறையில் நிலவும் சவால்களுக்கு விரைவான தீர்வு காண்பதுடன், ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.

 

அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (14) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரச அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

இதன்போது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், தாம் நாளாந்தம் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

குறிப்பாக, ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும், அவர்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கும் உடனடியானதும் உறுதியானதுமான பொறிமுறையொன்றை அமைச்சு உருவாக்க வேண்டும் என மீனவர் சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

அத்துடன், ஒலுவில் துறைமுகத்தை முழுமையான மீன்பிடித் துறைமுகமாக தரம் உயர்த்துவதுடன், துறைமுக வாயிலில் குவிந்துள்ள மண்ணை அகற்றி, மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மீனவர்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களுடன் கலந்துரையாடி, முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமானதும் விரைவானதுமான தீர்வுகளை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

துறைமுகத்தைப் பயன்படுத்தி முதலீடுகளை மேற்கொள்வதற்கு பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்தார். அவர்களின் பங்களிப்புடன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதுடன், மீனவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Source: https://samugammedia.com/end-to-coastal-robbery-threat–fisheries-minister-assures-1786789467

NO COMMENTS

Exit mobile version