கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் ஆறு சந்தேகநபர்கள் தம்பலகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த மோட்டார் ரக வாகனமும், முச்சக்கரவண்டியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நேற்று (2026.06.26) தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பலகாமம் – கிண்ணியா வீதியில் உள்ள ‘ரத்து பாலம’ (சிவப்பு பாலம்) அருகில் தம்பலகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களான அபேசேகர உள்ளிட்ட குழுவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, தம்பலகாமத்தில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த மோட்டார் ரக வாகனத்தை மறித்து பொலிஸார் சோதனையிட்டனர்.
இந்த சோதனையின்போது, வாகனத்திற்குள் கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக தம்பலகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சன பண்டாரவுக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, குறித்த கஜமுத்துவையும் அதனுடன் பயணித்த நபர்களையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
மேலும், இந்த கடத்தலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், அந்த மோட்டார் வாகனத்துடன் இணைந்து பயணித்த முச்சக்கரவண்டியும், அதில் பயணித்த நபர்களும் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://samugammedia.com/6-suspects-arrested-along-with-gajamuthu-1782551193
