Home இலங்கை உடப்பு மற்றும் திருக்கேதீஸ்வரத்தில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகள்

உடப்பு மற்றும் திருக்கேதீஸ்வரத்தில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகள்

0
image

2026ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று (12) புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் புனித நீர்நிலைகளில் முன்னோர்களை நினைவுகூர்ந்து சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், பிதிர்க்கடன் உள்ளிட்ட சடங்குகளை மேற்கொள்வது இந்து சமய மரபாகக் காணப்படுகிறது.இதனால், அதிகாலை முதலே பக்தர்கள் ஆலயங்கள் மற்றும் புனித நீர்நிலைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பின்னர் புதன்கிழமையில் ஆடி அமாவாசை தினம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதால், இந்த ஆண்டின் ஆடி அமாவாசை பக்தர்கள் மத்தியில் சிறப்புக் கவனத்தைப் பெற்றுள்ளது.மேலும், இந்த ஆண்டின் ஆடி அமாவாசை தினத்துடன் சூரிய கிரகணமும் இடம்பெறுகிறது.

எனினும், இன்றைய சூரிய கிரகணம் இலங்கையில் தென்படாது என்பதால், இலங்கையில் இன்று ஆடி அமாவாசை விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று (12) புதன்கிழமை காலை விசேட பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.

திருக்கேதீஸ்வர ஆலய பிரதமகுரு கருணாநந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற விசேட வழிபாடுகளில், வசந்த மண்டபத்தில் கௌரியுடன் எழுந்தருளிய திருக்கேதீஸ்வரநாதருக்கு சிறப்பு வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி எழுந்தருளி பாலாவி தீர்த்தக்கரைக்கு தீர்த்தமாடச் சென்றார். பாலாவி தீர்த்தம் இடம்பெற்றதை தொடர்ந்து சுவாமி வெளிவீதி உலா வந்தார்.

இதன்போது பாலாவி தீர்த்தக்கரையில் பக்தர்கள் தமது மறைந்த முன்னோர்களை நினைவுகூர்ந்து எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மோட்ச அர்ச்சனை மற்றும் மோட்ச விளக்கு ஏற்றும் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் பக்த அடியார்கள் தமது மறைந்த முன்னோர்களை நினைவுகூர்ந்து சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டனர்

 

அந்த வகையில், புத்தளம் உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபாடுகளையும் மேற்கொண்டனர்.

 

Source: https://samugammedia.com/special-prayers-on-aadi-amavasai-at-udappu-and-thirukkethiswarar-1786520668

NO COMMENTS

Exit mobile version