Home இலங்கை கடன் சுமை 190 பில்லியன் ரூபாவால் அதிகரித்ததாக பரவும் செய்திகள் – மறுக்கிறார் பிரதி அமைச்சர்!

கடன் சுமை 190 பில்லியன் ரூபாவால் அதிகரித்ததாக பரவும் செய்திகள் – மறுக்கிறார் பிரதி அமைச்சர்!

0
image

அரசாங்கத்தின் கடன் சுமை 190 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையால் அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ முற்றாக நிராகரித்துள்ளார்.

 

உத்தியோகபூர்வமான மற்றும் சரிபார்க்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொள்ளாமல் நாட்டின் கடன் நிலைமை தொடர்பில் இவ்வாறான தகவல்கள் பரப்பப்படுவது கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளை மேற்கோள் காட்டி, அரசாங்கக் கடன் 190 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், இந்த அதிகரிப்புக்கான அடிப்படை என்ன என்பது தொடர்பில் அந்த அறிக்கைகளில் தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை என்றும், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள சில தரவுகள் தவறானவை என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கடன் தரவுகள் காலாண்டு அடிப்படையில் வெளியிடப்படும் கடன் அறிக்கை (Debt Bulletin) ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளடக்கப்படுவதுடன், தனிப்பட்ட நாடுகள், பன்முக அமைப்புகள், இருதரப்பு மற்றும் வர்த்தக மூலங்கள் ஊடாக பெறப்பட்ட கடன் தொடர்பான விபரங்களும் துல்லியமாக பதிவு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அரசாங்கத்தின் கடன் நிலைமை தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு முன்பும், அது தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு முன்பும் உத்தியோகபூர்வ ஆவணங்களை முறையாகப் பரிசீலிக்க வேண்டும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் அரசாங்கத்தின் கடன் சுமை 190 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கவில்லை என்றும் அவர் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Source: https://samugammedia.com/rumors-say-the-debt-burden-has-increased-by-190-billion-rupees—deputy-chief-minister-denies-it-1788414506

NO COMMENTS

Exit mobile version