இலங்கையின் கரையோரப் பகுதிகளில் சாகச விளையாட்டுகளுக்குப் பெயர்பெற்ற கற்பிட்டியில், வன்னிமுந்தல் கடற்பரப்பில் நேற்று (27) நடைபெற்ற படகு ஓட்டப் போட்டி விளையாட்டு ஆர்வலர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இறுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வன்னிமுந்தல் ‘ஸீ லயன்ஸ் (Wannimundal Sea Lions Sports Club) விளையாட்டுக் கழகத்தினர் ஏற்பாடு செய்த இந்தப் போட்டியில், கற்பிட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும், சிலாபம், நீர்கொழும்பு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த திறமையான மாலுமிகள் மற்றும் அதிவேகப் படகோட்டிகள் கலந்துகொண்டனர்.
போட்டியில் 25 சி.சி., 40 சி.சி. படகுகள் மற்றும் 15 சி.சி. இயந்திரம் பொருத்தப்பட்ட வல்லங்களுக்கான திறந்த படகு ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து நீச்சல், தலையணைச் சண்டை, முட்டி உடைத்தல் மற்றும் கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.
இலங்கையின் பாரம்பரிய மற்றும் நவீன படகோட்டுக் கலையை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.ஜே.எம். பைசல் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அத்துடன், கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ஆர்.எம். ரிகாஸ், முன்னாள் தவிசாளர் ஏ.எம். இன்பாஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தியதுடன், வெற்றியாளர்களுக்கு பரிசுகளையும் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிலையில், போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, தனிநபர் ஒருவரை பலர் இணைந்து கோடாளி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட போதிலும், விரைந்து நடவடிக்கை எடுத்த பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
