கொழும்பு – களுபோவில – விமலசிறி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றை இலக்கு வைத்து நேற்று (09) இரவு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த வீட்டை இலக்கு வைத்து கைக்குண்டை வீசிய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்துக்கான காரணம் மற்றும் தாக்குதலின் பின்னணி தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
