Home இலங்கை காணிகளை விடுவிக்கக் கோரி வசாவிளான் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

காணிகளை விடுவிக்கக் கோரி வசாவிளான் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

0
image

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கக் கோரி, வசாவிளான் மக்களால் இன்று (02)கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இந்தப் போராட்டம் இன்று காலை 10.00 மணியளவில் வசாவிளான் சந்தியில் ஆரம்பிக்கப்பட்டது. 

வசாவிளான் மீள்குடியேற்ற அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்தப் போராட்டத்தில், 36 ஆண்டுகளாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது பாரம்பரிய காணிகளை விடுவித்து, மீள்குடியேறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர். 

இதனுடன், பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காணி மீட்புக்கான போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. 

ஏற்கனவே மயிலிட்டி மக்களால் மயிலிட்டியில் ஒரு போராட்டமும், பலாலி மக்களால் பலாலி சந்தியில் மற்றுமொரு போராட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வரிசையில், இன்று வசாவிளான் மக்களும் போராட்டத்தில் இணைந்துள்ள நிலையில், பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தற்போது மூன்று இடங்களில் காணி மீட்புக்கான கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இராணுவம் கையகப்படுத்தியுள்ள தங்களது சொந்தக் காணிகளை உடனடியாக உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைத்து, மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீளக் குடியேறுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக முன்னெடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/vasavilan-residents-stage-protest-demanding-the-release-of-lands-1785649108

NO COMMENTS

Exit mobile version