கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமடு 55ஆம் கட்டைப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டதாகக் கூறப்படும் இராணுவ உயர் அதிகாரி உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கடந்த 19ஆம் திகதி இரவு எட்டு பேர் கொண்ட குழுவினர் புதையல் தோண்டுவதற்கு முயற்சிப்பதாக கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, பொலிஸார் குறித்த பகுதியை சுற்றிவளைத்து, புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இராணுவ உயர் அதிகாரி உள்ளிட்ட எட்டு பேரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, சிலாபம், புத்தளம், யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மற்றும் குருநாகல் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் சிறிய ரக வாகனம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று (20) கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
