பண்டாரவளையில் அமைந்துள்ள கும்பல்வெல தியான மையத்திற்கு அண்மையிலுள்ள வனப்பகுதியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.
தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் எல்ல பொலிஸார், தீயணைப்புப் படையினர், அப்பகுதியில் வசிக்கும் பௌத்தத் துறவிகள், இராணுவத்தினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டனர்.
இந்தத் தீ விபத்தினால் யாருக்கும் எவ்வித உயிராபத்தோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.
விகாரைக்கோ அல்லது அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கோ எந்தவிதமான சொத்துச் சேதங்களும் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.
எனினும், நிலவும் கடும் வறண்ட வானிலை, பலத்த காற்று மற்றும் செங்குத்தான நிலப்பரப்பு ஆகிய காரணங்களால் தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதன் விளைவாக இன்று அதிகாலை தீ மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாதுகாக்கப்பட்ட இந்த வனப்பகுதியில் தீப்பிடித்ததற்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
