Home இலங்கை கோவில்குளத்தின் நீரேந்து பகுதி ஆக்கிரமிப்பு; நீர்வரத்து தடைப்படும் அபாயம்! மக்கள் போராட்டம்

கோவில்குளத்தின் நீரேந்து பகுதி ஆக்கிரமிப்பு; நீர்வரத்து தடைப்படும் அபாயம்! மக்கள் போராட்டம்

0
image

வவுனியா கோவில்குளத்தின் நீரேந்து பகுதி தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், குளத்திற்கு இயற்கையாக வரும் நீர்வரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, அப்பகுதி கமக்காரர் அமைப்பினரும் பொதுமக்களும் இன்று (06) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான இந்தப் போராட்டம், பேரணியாக வவுனியா மாவட்ட செயலகம் நோக்கிச் சென்றது. அங்கு போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.ஏ. சரத்சந்திரவிடம் கையளித்தனர்.

குளத்தின் நீரேந்து பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய பொதுச் சொத்து எனக் குறிப்பிட்ட கமக்காரர் அமைப்பினர், அந்தப் பகுதியில் இடம்பெறும் ஆக்கிரமிப்புகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடருமானால் எதிர்காலத்தில் குளத்திற்கு வரும் இயற்கை நீர்வரத்து பாதிக்கப்படுவதுடன், விவசாயத்திற்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் என எச்சரித்தனர்.

மகஜரைப் பெற்றுக்கொண்ட மாவட்ட அரச அதிபர் பி.ஏ. சரத்சந்திர, இந்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போராட்டக்காரர்களுக்கு உறுதியளித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம், வவுனியா மாநகர சபை மேயர் சு. காண்டீபன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Source: https://samugammedia.com/encroachment-of-the-water-area-of-kovilkulam-threat-of-water-supply-being-stopped-people-protest-1783334628

NO COMMENTS

Exit mobile version