சொல்லிசைப் பாடகர் க.சங்கீத்ஷன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போது அதை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் ஜூலை 14 இற்குத் திகதியிடப்பட்டது.
நீதியரசர்கள் மஹிந்த சமயவர்த்தன, கலாநிதி சோபித ராஜ கருண, சம்பத் அபயக்கோன் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.
வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட சமயத்துக்கும் இப்போதைய நிலைமைக்கு இடையில் சில மாற்றங்கள் இருக்கின்ற காரணத்தால் இந்த வழக்கு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து மனுதாரரின் கருத்தை எழுத்து மூலம் அறிய தகவல் அனுப்பப்பட்டிருக்கின்றது, அது கிடைக்கும் வரை மனுவை ஒத்தி வைக்கலாம் என்று சுமந்திரன் தெரிவித்தார்.
அரசு தரப்பில் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி அசாட் நவாவி முன்னிலையானார்.
மனுதாரரின் நியமிக்கப்பட்ட சட்டத்தரணியான மோகன் பாலேந்திராவும் மன்றில் முன்னிலையாகி இருந்தார்.
