நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடற்றொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
மன்னார் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர் ஒருவரே தற்போது காணாமல் போயுள்ளதாகவும், மற்றுமொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு – தொடுவாவ பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற படகொன்று நேற்றுமுன்தினம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இரு கடற்றொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் மற்றுமொரு படகினால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சிலாபம் – தொடுவாவ பகுதியில் இருந்து கடந்த 31ஆம் திகதி பிற்பகல் கடலுக்குச் சென்று விபத்துக்குள்ளான படகில் இருந்து காணாமல் போன இரு கடற்றொழிலாளர்களில் ஒருவரின் சடலம் நேற்று (02) கொள்ளுப்பிட்டி கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த விபத்தில் உயிர் தப்பிய மற்றுமொரு கடற்றொழிலாளர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
