குற்றச்சாட்டுக்கு உள்ளான சந்தேக நபர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விசாரணை அதிகாரிகளை நியமிக்க முடியாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்டோர் 12 கோடி இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அப்படையில் கைது செய்யப்பட்டுள்ளமை மற்றும் சுரேஷ் சலேயின் விவகாரம் தொடர்பான அனைத்து விசாரணைகளும் தொடர்ச்சியாகவும் வேகமாகவும் நடைபெற்று வருகின்றன.
இந்த விசாரணைகளின் உள்ளகத் தகவல்கள் ஊடகங்களுக்குத் தெரியவராமல் இருக்கலாம். ஆனால், விசாரணைகளின் முன்னேற்றங்கள் அனைத்தும் நீதிமன்றத்திற்கு முறையாக அறிக்கை செய்யப்படுகின்றன. அப்போது பொதுமக்களுக்கு உண்மை நிலைமையைத் தெரிந்துகொள்ள முடியும்.
இவ்விசாரணைகள் சரியாக நடக்கிறதா இல்லையா என்பதைப் பார்ப்பதற்கான சிறந்த அளவுகோள் என்னவென்றால், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் நடத்தையும் அவர்களின் பதற்றமும்தான். அவர்கள் எந்தளவுக்கு பதற்றமடைகிறார்களோ, அந்தளவுக்கு விசாரணைகள் சரியான பாதையில் நகர்கின்றன என்று அர்த்தம்.
மேலும், இப்போது ஒரு புதிய கலாசாரம் நாட்டில் உருவாகியுள்ளது. சந்தேக நபர்களே தங்களுக்கு இந்த விசாரணை அதிகாரிதான் வேண்டும் என்றும், குறிப்பிட்ட அதிகாரியை மாற்ற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறார்கள். அவ்வாறான கோரிக்கைகளுக்கு ஒருபோதும் இடம் வழங்கப்படமாட்டாது.
பொலிஸ், குற்றப்புலனாய்வுப் பிரிவு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு போன்றவற்றில் தகுதியான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது பணிகளைச் சுயாதீனமாகச் செய்கிறார்கள். சந்தேக நபர்களின் விருப்பப்படி புலனாய்வு அதிகாரிகளை நியமிக்க முடியாது என்றார்.
