Home இலங்கை சமூக ஊடகங்கள் வழியே இலங்கை பெண்களுக்கு வலைவீசும் கும்பல் – பொலிஸார் அவசர எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் வழியே இலங்கை பெண்களுக்கு வலைவீசும் கும்பல் – பொலிஸார் அவசர எச்சரிக்கை

0
image

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற தொடர்பாடல் தளங்கள் ஊடாக பெண்களை ஏமாற்றி பண மோசடி, பாலியல் சுரண்டல் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கைப் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களுடன் நட்பு ஏற்படுத்தி, அவர்களை மனரீதியாகக் கட்டுப்படுத்தி பின்னர் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதோடு, பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை மோசடி செய்யும் சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் பதிவாகியுள்ளது.

சில சந்தர்ப்பங்களில், சந்தேகநபர்கள் பெண்களுக்கு மயக்க மருந்துகள் வழங்கி மயக்கநிலைக்கு ஆளாக்கிய பின்னர் துஷ்பிரயோகம் அல்லது திருட்டுச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பெண்களின் நம்பிக்கையைப் பெற்று, பின்னர் அவர்களிடமிருந்து பணம் மற்றும் சொத்துக்களை மோசடியாகப் பெற்றுக்கொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. சில வழக்குகள் கொலை உள்ளிட்ட பாரிய குற்றங்களாகவும் மாறியுள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து கண்காணிக்குமாறு நாடு முழுவதும் உள்ள பொலிஸ் அதிகாரிகள், புலனாய்வு பிரிவுகள் மற்றும் சமூகப் பொலிஸ் பிரிவுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் அல்லது இணைய தளங்கள் வழியாக அறிமுகமாகும் நபர்களிடம் பணம், நகை அல்லது பெறுமதியான பொருட்களை ஒப்படைக்க வேண்டாமெனவும், தனிப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் ரகசிய தகவல்களை பகிர்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் அறிமுகமற்ற நபர்களை நேரில் சந்திக்கும் அழைப்புகள் தொடர்பிலும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடிகளுக்கு ஆளானவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு தகவல் வழங்குமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவசர உதவிக்காக 118, 119, 107 மற்றும் 109 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கங்களையும் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/gang-targeting-sri-lankan-women-through-social-media—police-urgent-warning-1782019375

NO COMMENTS

Exit mobile version