இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இன்று (08) நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை பேருந்தில் அவர் நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாமல் ராஜபக்ச பதிலளிக்க மறுத்துள்ளார்.
எனினும், “அனைத்து விடயங்களையும் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவதற்காகவே செல்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற பொதுச் செயலாளர் விடுத்த அறிவித்தலின் அடிப்படையில் நாமல் ராஜபக்சவை நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன முன்னதாக தெரிவித்திருந்தார்.
எயார்பஸ் விமானங்கள் கொள்முதல் தொடர்பான மோசடி சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 4ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
