பஸ் உரிமையாளர்கள்–மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகாரிகள் இடையே சர்ச்சை
டயகம போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும், மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு காரணமாக பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சுமார் 10 வருடங்களாக டயகம ஈஸ்ட் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி காலை 7.00 மணிக்கும், காலை 8.45 மணியளவிலும் இரண்டு பேருந்துகள் வழமையாக சேவையில் ஈடுபட்டு வந்துள்ளன.
இந்நிலையில், கடந்த வாரம் கண்டியில் தனியார் பஸ் உரிமையாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், குறித்த வீதியில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளை ரொட்டேஷன் முறையில் இயக்குவதற்கான புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, டயகம டேவிட் பாம் வீதியில் இதுவரை ஒரு பேருந்து மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில், அங்கும் ரொட்டேஷன் முறையில் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனையடுத்து, நேற்று மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகளால் டயகம பிரதேசத்தில் விசேட பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது புதிய நடைமுறையின் அடிப்படையில், நேர அட்டவணைக்கு அமைவாக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோது, சில பஸ் உரிமையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
ரொட்டேஷன் முறையில் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போதிலும், மூன்று பேருந்து உரிமையாளர்கள் அதற்கு இணங்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் இரண்டு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக சேவையில் ஈடுபட்டதையடுத்து ஏற்பட்ட நிலைமையைத் தொடர்ந்து, குறித்த பேருந்துகளில் பயணித்த பயணிகளை பொலிஸாரும் போக்குவரத்து அதிகார சபை ஊழியர்களும் இறக்கி, நேர அட்டவணைக்கு அமைவாக செல்லும் பேருந்தில் ஏறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், குறித்த மூன்று பேருந்துகளின் சாரதிகளிடமும் நேர அட்டவணைக்கு அமைவாக சேவையை முன்னெடுக்குமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்த போதிலும், அதற்கு முழுமையான இணக்கப்பாடு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பஸ் உரிமையாளர்களின் குற்றச்சாட்டு
இதுகுறித்து குறித்த மூன்று பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கையில்,
“நாங்கள் சுமார் 20 வருடங்களாக உரிய அனுமதிப்பத்திரங்களுடன் இந்தப் பாதையில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றோம். சில பேருந்துகளுக்கு டயகம நகரிலிருந்து ஹட்டன் வரையிலான சேவைக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டயகம ஈஸ்ட் பாதையில் சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதி இல்லாத பேருந்துகளை எவ்வாறு குறித்த பாதையில் சேவையில் ஈடுபடுத்த முடியும்?” என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், தங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரி நுவரெலியா பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், சட்டத்தரணி ஊடாக மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகார சபைக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், புதிய நேர அட்டவணையின் அடிப்படையில் தங்களது பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி மற்றொரு தரப்பினர் டயகம பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக நுவரெலியா தனியார் போக்குவரத்து அதிகார சபைத் தலைவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,
அனைத்து பேருந்து உறுப்பினர்களினதும் நலனை கருத்திற்கொண்டு புதிய ரொட்டேஷன் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் எந்தவொரு பஸ் உரிமையாளருக்கும் பாதிப்பு அல்லது பிரச்சினை ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பயணிகளின் நலன் மற்றும் ஒழுங்கான போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்துவதற்காக புதிய நேர அட்டவணை மற்றும் ரொட்டேஷன் முறையை அனைத்து பஸ் உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, டயகம–ஹட்டன் பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள இந்தப் போக்குவரத்து தொடர்பான சர்ச்சைக்கு உரிய தீர்வு காணப்பட்டு, பயணிகளுக்கு தடையற்றதும் பாதுகாப்பானதுமான பஸ் சேவை வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Source: https://samugammedia.com/sensation-surrounding-the-dayagamahatton-bus-service-1788846661
