சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணி உதவியாளர்கள், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மற்றும் சிற்றூழியக் கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட 2,652 பேருக்கு அடுத்த மாதத்திற்குள் நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் இலவச சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்துதல், வைத்தியசாலைகளின் செயல்திறனை உயர்த்துதல், வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் நோயாளி பராமரிப்பு சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்லுதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் 627 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு நாளை (04) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
தொடர்ந்து, ஜூலை 18ஆம் திகதி இரண்டாம் கட்டமாக 600 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கும், ஒகஸ்ட் 1ஆம் திகதி மூன்றாம் கட்டமாக 762 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
அதேநாளில் 295 கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மற்றும் 121 சிற்றூழியக் கட்டுப்பாட்டாளர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், ஜூலை 16ஆம் திகதி 247 அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்களுக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
