Home இலங்கை சுகாதார சீர்கேடான உணவு விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை: 6 மாத சிறைத்தண்டனை, ரூ.123,000 அபராதம்

சுகாதார சீர்கேடான உணவு விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை: 6 மாத சிறைத்தண்டனை, ரூ.123,000 அபராதம்

0

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் அண்மைக் காலமாக உணவகங்கள் மற்றும் நடமாடும் உணவு விற்பனை நிலையங்கள் மீது தொடர்ச்சியான சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் சங்கானை, சுழிபுரம் மற்றும் அராலி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளின் போது, சில உணவகங்கள், மூன்று நடமாடும் பாண் வாகனங்கள் மற்றும் ஒரு ஐஸ்கிறீம் விற்பனை வாகனம் சுகாதார சீர்கேடான நிலையில் இயங்கியமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, குறித்த உணவு விற்பனையாளர்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்று (11) மல்லாகம் நீதிமன்றில் 10 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்குகளை அதே நாளில் விசாரணைக்கு எடுத்த நீதவான், 9 பேருக்கு மொத்தமாக ரூ.100,000 அபராதம் விதித்தார்.

மேலும், சுழிபுரம் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனையுடன் ரூ.23,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

பொது சுகாதார விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக எதிர்காலத்திலும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/strict-action-against-sale-of-unhygienic-food-6-months-imprisonment-rs123000-fine-1781276797

NO COMMENTS

Exit mobile version