யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி, “உரிமைப்பந்தம்” என்ற பெயரிலான அமைதி வழி மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்று மாலை செம்மணிச் சந்தி அணையா விளக்குத்திடலில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
செம்மணி மனித புதைகுழியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணிகளில் இதுவரையில் 412 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 1999ஆம் ஆண்டு கால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மீட்கப்பட்ட 15 என்பு கூடுகளுமாக 427 என்பு கூடுகளை நினைவுறுத்தி, 427 தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டன.
அதன் போது, அணையாவிளக்கு தூபிக்கு மலர் மாலை அணிவித்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.
