Home இலங்கை தண்டவாளமின்றி வீதியில் பயணித்த புகையிரத எஞ்சின்

தண்டவாளமின்றி வீதியில் பயணித்த புகையிரத எஞ்சின்

0
image

இலங்கை புகையிரத சேவை வரலாற்றில் முதன்முறையாக, தண்டவாளங்களைப் பயன்படுத்தாமல் பிரதான பொது வீதி வழியாக புகையிரத எஞ்சின் ஒன்று வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நேற்று (3) இரவு இடம்பெற்றது.

அதன்படி, M5 வகையைச் சேர்ந்த 781 இலக்க புகையிரத எஞ்சின், கண்டியிலிருந்து பேராதனை நோக்கி விசேட கனரக வாகனத்தின் மூலம் பிரதான வீதி வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. 

இந்த நடவடிக்கை, மலையகப் புகையிரதப் பாதையில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

அண்மையில் வீசிய டிட்வா புயல் காரணமாக, கடுகண்ணாவ – கம்பளை இடையிலான மலையகப் புகையிரதப் பாதை கடுமையாக சேதமடைந்தது. 

இதனால் அந்தப் பகுதியில் புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகளிலும் சிக்கல் ஏற்பட்டது.

தற்போது சில பகுதிகளில் மட்டுமே புகையிரத சேவை நடைபெற்று வரும் நிலையில், சேதமடைந்த பகுதிகளுக்கு தேவையான எஞ்சின்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. 

மேலும், பேராதனை களுபாலம் பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் இன்னும் நிறைவடையாததால், கண்டி – பேராதனை இடையிலான புகையிரதப் பாதையும் மூடப்பட்டிருந்தது.

இதையடுத்து மாற்று வழியாக, பிரதான நெடுஞ்சாலை வழியாக எஞ்சினை எடுத்துச் செல்லும் முடிவை புகையிரதத் திணைக்களம் எடுத்தது. 

இதற்காக விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம், இலங்கையின் பிரதான பொது வீதியில் உள்ள பாலம் ஒன்றைக் கடந்து, நாட்டின் மிக நீளமான ஆறான மகாவலி கங்கை மீது அமைந்த பாலத்தின் வழியாக பயணித்த முதல் புகையிரத எஞ்சின் என்ற வரலாற்றுப் பெருமையை M5 – 781 எஞ்சின் பெற்றுள்ளது.

இந்த அபூர்வ காட்சியை காண ஏராளமான பொதுமக்களும் ஆர்வலர்களும் வீதியோரங்களில் திரண்டிருந்ததுடன், சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

Source: https://samugammedia.com/a-train-engine-that-traveled-on-a-road-without-tracks-1783135539

NO COMMENTS

Exit mobile version