ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் (Shannon) பகுதியில் நேற்று (29) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், தாயைப் பிரிந்திருந்த சிறுத்தைக் குட்டி ஒன்று உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை அவதானித்த பிரதேச மக்கள் உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்கும் நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திற்கும் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விபத்தில் உயிரிழந்த சிறுத்தைக் குட்டியின் உடல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸாரும் நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
