மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாயும், அவருக்கு பிறந்த பெண் சிசுவும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹசலக, மினிப்பே பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான எச்.எம். ஸ்வர்ணமலா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பகால பரிசோதனைகளின் போது, வயிற்றில் இருந்த குழந்தை வழமையை விட அதிக வளர்ச்சியடைந்திருந்ததாக மருத்துவர்கள் கண்டறிந்திருந்தனர். இதனால் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமே பிரசவத்தை மேற்கொள்ள வேண்டும் என ஆரம்பத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
எனினும், பிரசவத்திற்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அங்குள்ள மருத்துவர்கள் சாதாரண பிரசவத்தை மேற்கொள்ள முயற்சித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சாதாரண பிரசவ முயற்சி வெற்றியளிக்காத நிலையில், இறுதிக்கட்டத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் பெண் சிசு உயிரிழந்ததுடன், தாயின் உடல்நிலையும் கவலைக்கிடமானதாக மாறியதால் அவர் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
பதுளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் தாயான ஸ்வர்ணமலா, கடந்த 06 ஆம் திகதி அதிகாலை 5.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இந்த இரு உயிரிழப்புகளும் மருத்துவர்களின் அலட்சியத்தால் ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் அதிகாரப்பூர்வ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
