திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பள்ளவக்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள், நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினையால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் 2004ஆம் ஆண்டு முதல் மக்கள் குடியேறியிருந்தாலும், இதுவரை நிரந்தரமான குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை குச்சவெளி பிரதேச சபையின் ஊடாக பவுசர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக அந்த சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக இன்று (12) பள்ளவக்குளம் ஜூம் ஆபள்ளி நிர்வாகம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் இணைந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், குடிநீர் இல்லாததால் பாடசாலை மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்தனர்.
குடிநீர் விநியோகத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த இரண்டு மாதங்களாக நீர் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், ஓரிரு வாரங்களுக்குள் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படாவிட்டால், குச்சவெளி பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
