Home இலங்கை தீவிரமாகும் டெங்கு பரவல்; முறைப்பாடுகளுக்கு விசேட எண் அறிமுகம்

தீவிரமாகும் டெங்கு பரவல்; முறைப்பாடுகளுக்கு விசேட எண் அறிமுகம்

0
image

டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு டெங்கு செயல்பாட்டு நிலையமொன்றை நிறுவியுள்ளது.

 

இதன் ஒரு பகுதியாக, டெங்கு தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்காக 0117 966366 என்ற பிரத்யேக உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு நோய் தொடர்பான தகவல்களைப் பெறவும், முறைப்பாடுகளை அறிவிக்கவும் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வுத் தகவல்களை அறிந்துகொள்ளவும் இந்த உதவி எண்ணைப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நிலவி வரும் தொடர் மழைப் பொழிவு காரணமாக டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000-ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 54,189 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.நாளாந்தம் 950 முதல் 1,000 வரையான புதிய நோயாளிகள் இனங்காணப்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 1,030 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் எனப் பதில் இயக்குநர் டாக்டர் கபில கன்னங்கரா தெரிவித்துள்ளார்.

பதிவாகியுள்ள நோயாளர்களில் அதிகளவிலானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அடுத்த மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் நாடு தழுவிய ரீதியில் செயல்படுத்தப்படவுள்ளன. விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை என்பதால், பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பராமரித்து, இத்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

Source: https://samugammedia.com/intense-spread-of-dengue-special-number-introduced-for-complaints-1782828234

NO COMMENTS

Exit mobile version