முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மீன்பிடி அனுமதிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், அங்கு இடம்பெற்று வரும் சட்டவிரோதக் கடற்றொழில் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நடப்பாண்டிற்கான இரண்டாவது கடற்றொழில்சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார். இக்கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு கடற்பரப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மீன்பிடி முறைகள் தொடர்பில், அப்பகுதி மீனவர்களால் பெறப்பட்ட தெளிவான புகைப்பட ஆதாரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், நேரடியாகவே கடற்றொழில் அமைச்சரிடம் கையளித்து உடனடி நடவடிக்கை கோரினார்.
கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய ரவிகரன் எம்.பி, கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தால் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்படும் அனுமதிகளே இச்சட்டவிரோதச் செயல்களுக்கு வழிவகுப்பதாகக் குற்றம்சாட்டினார்.
“தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் சாலைப் பகுதியில் ஐந்து படகுகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக உள்ளூர் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இத்தகைய வெளிமாவட்ட ஊடுருவல்களால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பரிய மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்” என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கும் அனுமதிகளை உடனடியாக ரத்து செய்வதோடு, முல்லைத்தீவு கடற்பகுதியின் வளங்களைப் பாதுகாக்கவும் உள்ளூர் மீனவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
