தேவிநுவர உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்திர எசல பெரஹராவுக்காக 650 பொலிஸ் அதிகாரிகளும், 100 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கந்தர பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தேவிநுவர உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்திர எசல பெரஹராவின் முதல் பெரஹரா இன்று (23) ஆரம்பமாவதுடன், ஜூலை 29ஆம் திகதி மகா பெரஹரா இடம்பெற்றதன் பின்னர் அது நிறைவடையும்.
காவடிப் பெரஹரா ஜூலை 28ஆம் திகதியும், ரந்தொலிப் பெரஹரா ஜூலை 29ஆம் திகதியும் நடத்தப்படவுள்ளதாகப் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்நாட்களில் பிற்பகல் 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிசார் சாரதிகளிடம் கேட்டுக்கொள்கின்றனர்.
அதற்கமைய, மாத்தறையிலிருந்து தங்காலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் மத்தேவத்தை தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அருகில் மாத்தறை – யட்டியன வீதிக்கு வந்து, கெக்கனதுர சந்ததியிலிருந்து வேஹல்ல வீதி ஊடாக திக்வெல்ல வரை பயணிக்கலாம்.
தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் வாகனங்கள் தலல்ல தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அருகில் திரும்பி, நாவொட்டுன்ன வீதி ஊடாக வியன்னருவ சந்தி வரை சென்று, திக்வெல்ல – வேஹல்ல வீதி ஊடாக கெக்கனதுர சந்திக்கு வந்து கெக்கனதுர – மாத்தறை வீதி ஊடாக மாத்தறை வரை பயணிக்கலாம்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் பெரஹராவைக் காண வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் வாகனங்களைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தப் பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
