2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகி, செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த முறை உயர்தரப் பரீட்சைக்காக நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை மையங்களில் மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இதில் 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 107,814 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குவர்.
பரீட்சைகளை எவ்வித தடையுமின்றி நடத்துவதற்குத் தேவையான பரீட்சை மையங்கள், மேற்பார்வை ஊழியர்கள் மற்றும் ஏனைய தளபாட வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
பரீட்சை விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ஏதேனும் அவசர நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் தேவையான வசதிகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தயாராக உள்ளதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் இம்முறை இரண்டாயிரத்து 630 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் பரீட்சைக்குத் தோற்றும் மொத்தப் பரீட்சார்த்திகளில், 2,018 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகளாகவும், 612 பேர் தனியார் பரீட்சார்த்திகளாகவும் தோற்றவுள்ளனர்.
பரீட்சைகளைச் சீரான முறையில் நடாத்துவதற்காக மாவட்டம் முழுவதும் 20 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 9 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பரீட்சைக்குத் தோற்றும் சுமார் 1500 மேற்பட்ட மாணவர்கள் ஆலய தரிசித்து மிகுந்த ஆர்வத்துடன் உற்சாகத்துடனும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்தனர்.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள க.பொ.த.உயர்தர பரீட்சை நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தபடபட்ட நிலையில் பாரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோன்றினர்.
குறிப்பாக ஹட்டன் வலய கல்வி பணிமனைக்கு உட்பட்ட மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பரீட்சை இடம் பெற்றது.
எவ்விதமான தங்கு தடையின்றி மிகவும் ஆர்வத்துடன் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரீட்சைக்கு தோன்றினர்.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை சற்று ஓய்ந்து போதிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது.
மேலும் சாமிமலை பகுதியில் இருந்தும் ஹட்டன் பகுதியில் இருந்து காலை வேளையில் சேவையில் ஈடுபட்டுவரும் அரச பேருந்துகள் இன்று சேவையில் இல்லாத நிலையில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கபட்ட நிலையில் பரீட்சைக்கு தோற்ற முச்சக்கர வண்டிகள் மூலம் பெருந்தொகை பணத்தை செலவு செய்து வருகை தந்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி நாளை முதல் இந்த சாலையில் நாளாந்தம் சேவையில் ஈடுபட்டு வந்த பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்து தர மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் க.பொ.த.உயர்தரப் பரீட்சை திருகோணமலை, தோப்பூர் -அல்ஹம்றா மத்திய கல்லூரியின் பரீட்சை மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இவ் பரீட்சை நிலையத்தில் தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் பாடசாலை மாணவர்கள், வெறிவாரி மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை எழுதச் சென்றிருந்ததை காணமுடிந்தது.
பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஆலோசனை வழங்கி வழியனுப்பி வைத்ததையும் காணமுடிந்தது.
அத்தோடு தோப்பூர் ஜம்மியத்துல் உலமா சபையினால், மாணவர்களுக்கான எழுது கருவிகளும் வழங்கி வைக்கப்பட்டு பிரார்த்தனை செய்து வழியனுப்பி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
