நாட்டில் உள்ள சிறைச்சாலைகளின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் கைதிகளின் பாதுகாப்புப் பொறிமுறைகள் குறித்து மறுஆய்வு செய்யும் உயர்மட்டக் கலந்தாலோசனை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் இயங்கி வரும் 33 சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளின் பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் அங்கு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், கைதிகள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள், அவர்களின் நலன்புரி உதவிகள் மற்றும் அவசர அசம்பாவித சூழ்நிலைகளின் போது துரிதமாகச் செயற்படுவதற்கான சிறப்புத் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக, சிறைத்துறை அதிகாரிகள், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் தேவைப்படும் பட்சத்தில் முப்படையினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ‘கூட்டுப் பொறிமுறை’ ஒன்றை எதிர்வரும் வாரத்திற்குள் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட குழுவானது 33 சிறைச்சாலைகளுக்கும் நேரடியாகச் சென்று கைதிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வுகளை முன்னெடுக்கவுள்ளது.
