நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பது தொடர்பான முன்மொழிவுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்து அவதூறுகளைப் பரப்புவதைத் தடுப்பதற்கு உடனடியாகத் தலையிடுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் (BASL) சிரேஷ்ட சட்டத்தரணி ஜகத் அபேநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் (11) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகளின் பதவிக் காலம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணி ஜகத் அபேநாயக்க, எனினும் இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி சில தரப்பினர் நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்து, அவர்களின் பொதுவான நடத்தைகள் மற்றும் செயற்பாடுகள் மீது அவதூறான மற்றும் குற்றச்சாட்டுகள் அடங்கிய கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அவதூறுப் பிரசாரங்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் காரணமாக, நீதிபதிகள் எந்தவித செல்வாக்குகளுமின்றி சுயாதீனமாகத் தமது நீதித்துறைப் பணிகளை முன்னெடுப்பதற்கான சூழல் பாதிக்கப்படுவதாகவும், இது நாட்டின் நீதிமன்றச் சுதந்திரத்திற்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தற்போது சேவையில் இருக்கும் நீதிபதிகளால் தம் மீதான இத்தகைய விமர்சனங்கள் அல்லது அவதூறுகளுக்கு பகிரங்கமாகப் பதிலளிக்க முடியாத சட்டவரம்புகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான சந்தர்ப்பங்களில் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்கவும், நீதிபதிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு பொறுப்புள்ளதை நினைவூட்டியுள்ளார்.
எனவே, நீதிமன்றச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் இத்தகைய சூழ்நிலைகளில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உடனடியாகத் தலையிட்டு, நீதிபதிகளின் கௌரவத்தையும் நீதிமன்றச் சுதந்திரத்தையும் பாதுகாக்கத் தேவையான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சட்டத்தரணி ஜகத் அபேநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
