“வளமான நாடு – அழகான வாழ்க்கை” எனும் தேசியக் கொள்கை முழக்கத்தின்கீழ், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில், நெடுந்தீவு மக்களின் நீண்டகால தேவைகளை நிறைவு செய்யும் வகையிலான பல்வேறு பிரம்மாண்ட அபிவிருத்தித் திட்டங்கள் இன்று (05) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க இந்த முக்கிய திட்டங்களைத் தொடக்கி வைத்தார்.
நெடுந்தீவின் ஒட்டுமொத்த வளர்ச்சி என உத்தேசமாக 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நெடுந்தீவு மக்களின் மிக முக்கிய தேவையாகக் கருதப்பட்ட நிரந்தர பெற்றோல் நிரப்பு நிலையம் அமைப்பதற்காக, 40,066,375 ரூபாய் செலவில் இன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இதன் மூலம் தீவுப்பகுதி மக்களின் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படவுள்ளது.
இவ்விழாவில் உரையாற்றிய அமைச்சர்,
2025ஆம் ஆண்டில் வடபகுதி வீதி மேம்பாட்டிற்கு மட்டும் 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.2025ல் வடக்கின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு 13 பில்லியன் ரூபாய் (13,000 இலட்சம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டில், இதைவிடக் கூடுதலான நிதி வடபகுதி அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
2025ஆம் ஆண்டில் 27 வீட்டுத்திட்டங்களும், 2026ஆம் ஆண்டில் 18 புதிய வீட்டுத்திட்டங்களும் நெடுந்தீவு மக்களுக்காகக் கையளிக்கப்படவுள்ளன.
மாவிலித்துறை இறங்குதுறை பயணிகள் வசதிக்காக 17 மில்லியன் ரூபாய் செலவில் நவீன காத்திருப்பு மண்டபம் மற்றும் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க பெருக்கு மரத்தைச் சூழவுள்ள பகுதியில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 8.9 மில்லியன் ரூபாய் செலவில் விற்பனை நிலையங்கள், இருக்கைகள், மலசலகூட மற்றும் குடிநீர் வசதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.
றோமன் கத்தோலிக்க பெண்கள் கல்லூரிக்கு புதிய வகுப்பறை கட்டிடமும், இருதய மற்றும் சென்.ஜோன்ஸ் முன்பள்ளிகள் புனரமைப்பும் செய்யப்படவுள்ளன.அத்துடன், உதயசூரிய விளையாட்டுக்கழக மைதானமும் மேம்படுத்தப்படவுள்ளது.
தண்ணீர் பவுஸர் திருத்தம், புதிய கிணறு நிர்மாணிப்பு, மழைநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கம் (கட்டம் 2), நெடுந்தீவு கடற்கரையில் குளியலறை வசதி என்பன மாகாண விசேட நிதியின்கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.
நெடுந்தீவுக்கான மின்சாரத் தேவையை நிறைவு செய்ய, சுற்றுச்சூழலுக்கு உகந்த மீள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (காற்றாலை மற்றும் சூரிய ஒளிப் படல்கள்)மூலமான மின் உற்பத்தித் திட்டமும், அவசரத் தேவைக்கான மின் பிறப்பாக்கி (Generator) வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன என தெரிவித்தார்.
