நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க இலங்கையிலிருந்து பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கிய நிவாரணக் குழுக்களை அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்தக் குழுக்கள் எதிர்வரும் சில நாட்களுக்குள் நேபாளத்திற்கு அனுப்பப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்தில் இடம்பெற்றுள்ள பேரிடர் மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் என தெரிவித்த அவர், ஜனாதிபதி தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை, நேபாளத்திற்கு அரசாங்கத்தின் சார்பில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நேபாளத்தில் தற்போது நிலவும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, எந்த வகையான நிவாரணக் குழுக்களை அனுப்புவது என்பது குறித்து பாதுகாப்பு அமைச்சும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து திட்டமிட்டு வருகின்றன.
எனினும், அனுப்பப்படவுள்ள படையினரின் எண்ணிக்கை மற்றும் நிவாரணக் குழுக்களின் தன்மை தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
ஓரிரு நாட்களுக்குள் தேவையான ஏற்பாடுகளை நிறைவு செய்து நிவாரணக் குழுக்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தெற்காசியாவின் அண்டை நாடாக நேபாளத்திற்கு தேவையான உதவிகளை வழங்க இலங்கை உணர்வுபூர்வமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Source: https://samugammedia.com/nepal-flood-disaster-plan-to-send-relief-teams-from-sri-lanka-1788075989
