“நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை” என்ற தொனிப்பொருளில் தேசிய நேர்மை வாரம் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுடன், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் இன்று (09) இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக மூன்றாம் கட்டை ,சோழையடி பைரவர் கோயிலிலிருந்து நடைபயணம் ஆரம்பமாகி, நாகம்மாள் அறநெறி பாடசாலை வரை முன்னெடுக்கப்பட்டது.
இந்நடைபயணத்தில் இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நேர்மை, ஒழுக்கம் மற்றும் நல்லொழுக்க விழுமியங்களை மாணவர்கள் மற்றும் சமூகத்தினர் மத்தியில் வளர்க்கும் நோக்கில் நடைபெற்ற இந்நடைபயணத்தின் பின்னர், கலை மற்றும் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன்போது மாணவர்களால் பல்வேறு கலை மற்றும் கலாசார நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன், நேர்மையான சமூகத்தை உருவாக்குவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
மேலும், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் நல்லொழுக்கம் ஆகிய விழுமியங்களை சமூகத்தில் வலுப்படுத்துவதன் மூலம் தூய்மையான மற்றும் சிறந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கில் தேசிய நேர்மை வாரத்தையொட்டி இவ்வாறான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Source: https://samugammedia.com/culture-of-integrity-clean-sri-lanka-rally-1786340485
