நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் அனைத்திற்கும் ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் இயங்கி வரும் 33 சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்படுவதன் மூலம், தற்போது முன்னெடுக்கப்படும் உடற்பரிசோதனைகளை நவீன முறையில் செய்ய முடியும்.
இதன் மூலம் சிறைச்சாலை அதிகாரிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்த இயந்திரங்கள் சிறைச்சாலைகளில் நிறுவப்பட்டதன் பின்னர், கைதிகளுக்குக் கொண்டு வரப்படும் உணவு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் ஸ்கேனர் இயந்திரங்கள் மூலமாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும்.
மேலும், சிறைச்சாலைச் சுவர்களுக்கு வெளியே இருந்து உள்ளே எறியப்படும் சட்டவிரோதப் பொதிகளைத் தடுப்பதற்கு, சிறைச்சாலை நிர்வாகத்துடன் இணைந்து புதிய பாதுகாப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஹர்ஷண மேலும் குறிப்பிட்டுள்ளார்.
