நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதுடன், பனிமூட்டம் நிலவுவதால் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி பலத்த காற்று குறித்த “மஞ்சள்” (Amber) எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (07) விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையானது, நாளை (08) முற்பகல் 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழை நிலைமை காரணமாக, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்காலத்தில் வெளியிடும் அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை தொடரும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதற்கமைய, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள பிரதேச செயலகப் பிரிவுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நுவரெலியா, நோர்வுட் மற்றும் கொத்மலை கிழக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புலத்கொஹுபிட்டிய, யட்டியாந்தோட்டை, தெரனியகல மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்டத்தின் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கண்டி மாவட்டத்தின் தொலுவ, பன்வில, மெததும்பர, உடபலாத, கங்க இஹல கோரள, உடுதும்பர மற்றும் தெல்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, ஓபநாயக்க மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்டத்தின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவிவருவதால் நுவரெலியா – தலவாக்கலை (ஏ7) பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு சந்திக்கு அருகில் வீதி நடுவில் திடீரென தாழிறங்கியுள்ளது.
இதன் காரணமாக குறித்த இடத்தில் போக்குவரத்து ஒரு மருங்கிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர் மழை காரணாமாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பல இடங்களிலும் சிறிய மண்சரிவுகள், பிரதான வீதியில் வெடிப்புக்கள் உள்ளதால் வீதியினை சீரமைக்கும் வரை அவ்வீதியினூடாக பயணங்களை மேற்கொள்ளும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறும், கனரக வாகனங்களை அவ்வீதியினூடாக செலுத்த வேண்டாம் எனவும் நானுஓயா பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மத்திய மலைநாட்டின் நீரேந்தும் பகுதிகளில் இடைவிடாது பலத்த மழை மற்றும் கடும் பனிமூட்டம் நிலவுகிறது, இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி நுவரெலியா – ஹட்டன் நுவரெலியா – கண்டி நுவரெலியா – பதுளை போன்ற பிரதான வீதிகளில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, அவ்வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
