Home இலங்கை பாடசாலைகளிலேயே அதிக டெங்கு நுளம்புக் குடம்பிகள் – 53 ஆக உயர்ந்த மரணங்கள்

பாடசாலைகளிலேயே அதிக டெங்கு நுளம்புக் குடம்பிகள் – 53 ஆக உயர்ந்த மரணங்கள்

0
image

வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு நுளம்பு ஒழிப்பு சோதனைகளின் போது, டெங்கு நுளம்புக் குடம்பிகள் அதிகளவில் பாடசாலை வளாகங்களிலேயே கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 250,477 வளாகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பாடசாலை வளாகங்களிலேயே அதிகளவிலான டெங்கு நுளம்புக் குடம்பிகள் பதிவாகியுள்ளன.

அதன்படி, சோதனை செய்யப்பட்ட பாடசாலை வளாகங்களில் 42.5 சதவீதத்தில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்பட்டுள்ளன.

மேலும், தொழிற்சாலைகளில் 38.4 சதவீதம், அரச நிறுவன வளாகங்களில் 28.1 சதவீதம், மத வழிபாட்டுத் தலங்களில் 25.9 சதவீதம் மற்றும் வீடுகளில் 9.2 சதவீதம் டெங்கு நுளம்புக் குடம்பிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளின்படி, நேற்று வரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 74,478 ஆக உயர்ந்துள்ளது.

அவற்றில், ஜூலை மாதத்தின் முதல் 17 நாட்களிலேயே 19,100 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை, நோய் பரவலின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தொடர்ந்தும் மேல் மாகாணமே அதிக டெங்கு பாதிப்புகளைக் கொண்ட மாகாணமாக பதிவாகி வருவதுடன், கம்பஹா மாவட்டத்தில் மட்டும் 15,596 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் மூன்று டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதால், இந்த ஆண்டில் இலங்கையில் பதிவான மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/most-dengue-cluster-cases-are-in-schools–deaths-rise-to-53-1784438138

NO COMMENTS

Exit mobile version