Home இலங்கை “எமக்கு இழப்பீடு வேண்டாம்; எங்கள் மண் வேண்டும்” – பலாலி மக்கள் தொடர் போராட்டம்

“எமக்கு இழப்பீடு வேண்டாம்; எங்கள் மண் வேண்டும்” – பலாலி மக்கள் தொடர் போராட்டம்

0
image

​நாட்டில்  இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாக, கடந்த 36 ஆண்டுகளாக தமது பூர்வீகக் காணிகளை இழந்து, அகதிகளாக வாழும் வலி. வடக்கு பலாலி மக்கள், இன்றும் (19)  , தமது காணிகளை மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி பலாலி சந்தியில் ஐந்தாவது வாரமாகவும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

​தமது சொந்த நிலங்களில்,  வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்புக் கோரிக்கையுடன் மக்கள் இந்த அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

​இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் சொந்தக் காணிகளில், இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், பல்வேறு வர்த்தக நிலையங்களை அமைத்துத் தொழில் புரிவதாகவும், சொந்தத் தேவைகளுக்காகவும் அந்தக் காணிகளைப் பயன்படுத்தி வருவதாகவும் மக்கள் கடும் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேநேரம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சொந்த வீடுகள் மற்றும் நிலங்கள் இன்றி, நண்பர்கள், உறவினர்களின் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும், அகதி முகாம்களிலும் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்வது பெரும் மன உளைச்சலையும், வாழ்வாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

​36 வருடங்கள் என்பது ஒரு மனிதனின் வாழும் காலத்தின் பெரும் பகுதி.நாம் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பும் மக்கள், வாக்குறுதி கொடுத்தபடி அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு, இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவித்து, தங்களைச் சொந்த மண்ணில் மீளக் குடியேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

எமக்குத் தேவையானது இழப்பீடோ மாற்றீடோ அல்ல, நமது சொந்த மண்” எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உணர்ச்சிகரமாகத் தெரிவித்தனர்.

உரிய தரப்புகள் இந்தப் போராட்டத்தை வெறும் ஒரு நிகழ்வாக பார்க்காமல், மக்களின் அடிப்படை உரிமையான ‘சொந்த மண்ணில் வாழும் உரிமை’யை நிலைநாட்டத் துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாமும் என்றும் தெரிவித்தனர்.

இதேநேரம் இன்றையதினம் பொலிசாரின் அழுத்தத்தையும் மீறி தரப்பாலான கொட்டகையை அமைத்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/we-dont-want-compensation-we-want-our-land–continuous-protests-by-the-people-of-palali-1784447208

NO COMMENTS

Exit mobile version