புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள், வாகனம் பதிவு செய்யப்பட்ட ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜூன் 10ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இனிவரும் காலங்களில், இலக்கத் தகடுகளை தாமதமின்றி வழங்கும் வகையில் நடைமுறைகள் மேலும் சீரமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிற இலக்கத் தகடுகள் வழங்கப்படவுள்ளன. கார்கள், SUV வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட அனைத்து மின்சார வாகனங்களுக்கும் முன்புறம் மற்றும் பின்புறம் பச்சை நிற இலக்கத் தகடுகள் வழங்கப்படும்.
வருமான அனுமதிப்பத்திரங்களை (Revenue Licence) பரிசோதிக்கும் போது பொலிஸாருக்கு மின்சார வாகனங்களை இலகுவாக அடையாளம் காணும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
மின்சார வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளின் பின்னணி நிறம் மட்டும் பச்சையாக மாற்றப்படுவதுடன், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் குறிப்பு உள்ளிட்ட ஏனைய அம்சங்களில் மாற்றம் இருக்காது எனவும் அவர் விளக்கினார்.
ஏனைய வாகனங்களுக்கு வழக்கம்போல் பின்புறத்தில் மஞ்சள் நிற இலக்கத் தகடும், முன்புறத்தில் வெள்ளை நிற இலக்கத் தகடும் வழங்கப்படும்.
மேலும், 2024, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நிலுவையில் உள்ள இலக்கத் தகடுகளை வழங்கும் பணிகள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
