வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கருத்து தெரிவித்த அவர், இந்தத் திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் தங்களுக்கு விருப்பமான ஓய்வூதிய முறையைத் தெரிவு செய்ய முடியும் என குறிப்பிட்டார்.
அதன்படி, ஓய்வு பெற்ற பின்னர் மாதாந்த ஓய்வூதியம் பெறுவதா அல்லது பணிக்காலம் நிறைவடைந்ததும் மொத்த தொகையை ஒரே தடவையாக பெற்றுக்கொள்வதா என்பதை தொழிலாளர்களே தீர்மானிக்க முடியும்.
மேலும், சட்டபூர்வமாக அனுப்பப்படும் பணவணுப்பல்களின் பதிவுகளை முறையாக பராமரிக்கவும், ஓய்வூதிய கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து விசேட செயலி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ரதவிரு’ ஓய்வூதியத் திட்டத்திற்காக குவைத் நிதியம் ரூ.2.1 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது சுமார் 17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு வரலாற்றில் அதிகளவிலான வெளிநாட்டு பணவரவு பதிவாகியுள்ளது.
எனினும், தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தில் 307 தொழிலாளர்கள் மட்டுமே இணைந்துள்ளதால், அதனை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை மத்திய வங்கி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
